Saturday 28 July 2012

ஈழத்தமிழர் வாழ்வில் தாக்கம் செலுத்தும் தலைமைத்துவ வெற்றிடம்.


ஒரு இனத்தையோ அல்லது ஒரு சமூகத்தையோ உருவழிப்பதற்கு பலவழிகள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தனிநபர்களால் அல்லது ஒரு கூட்டத்தினரால் கைக்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன ,கைக்கொள்ளப்படுகின்றன.இவற்றில் சிறந்த வினைத்திறனான வழியானது அந்த சமூகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அழிப்பது அல்லது உருமாற்றுவது.ஏனெனில் காலாச்சாரம் மற்றும் பண்பாடுமீதான தாக்குதலானது தனிமனிதனை உடனடியாக பாதகாமாக உணரக்கூடிய வகையில் சென்றடையாது.அவன் பாதகமென்று உணரும் தறுவாயில் அவனிருக்கும் கலாச்சாரம் வேறு ஒரு பரினமத்தில் இருக்கும்.அதோடு கலாச்சார மாற்றமானது பதின்ம பராயமானவர்களிடமிருந்து ஆரம்பிக்கும் போது ஈர்க்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் சென்றடையும் வீதம் அதிகமாக இருக்கும்.

அதுவும் எம்மைப்போன்ற இறுக்கமான ஒரு கட்டமைப்புக்குள்ளிருந்து சடுதியாக வெளிவந்த சமூகத்திடம் நாகரிக விருத்தி என்கிற பெயரில் நச்சுவிதைகள் விதைக்கப்படும் போது அதன்பால் சமூகம் ஈர்க்கப்படுவது நடைபெறக்கூடிய, நடைபெறுகின்ற ஒரு விடயமாகும்.அதனால் இப்பேர்ப்பட்ட சமூகத்தை சரியாக வழிநடாத்தி செல்லக்கூடிய தலைமையொன்று இன்றைய சூழ்நிலையில் தமிழ்ச்சமூகத்திற்கு அவசியமாகும்.ஆனால் எம்மை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்லிக்கொள்ளும் அரசியல் சார்ந்த சாராத அமைப்புக்கள் "எரியும் வீட்டில் கொள்ளிக்கட்டை புடுங்குபவர்களாகவே" இருக்கின்றனர்.இவர்கள் எம்மை வழிநடாத்துவார்களேன்றோ எமக்காக போராடுவார்களேன்றோ மக்களால் நம்பக்கூடிய அளவிற்கு இவர்கள் எதையும் இதுவரை செய்யவில்லை.

தமது இறுதி இருப்புவரையிலும் தமிழ் மக்களிற்கான அரசியல் தலைமையையும் சேர்த்தே வழங்கியிருந்தார்கள் விடுதலைப்புலிகள்.யுத்த அரசியல் மேலோங்கியிருந்த காலங்களில் தேர்தல் அரசியல் உரிமை-கடமை பற்றிய எந்தவொரு எதிர்பார்ப்பும் அற்றவர்களாகவே தமிழர்கள் வாழ்ந்திருந்தார்கள்.ஏனெனில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்த மக்களுக்கு இலங்கை அரசியலென்பது தம்மோடு தொடர்புபட்ட உலக அரசியல் போலவே விளங்கியது.அதனால் அவர்கள் இலங்கை அரசியல் பற்றி ஆர்வம் கொண்டிருந்தாலும் அதில் பூரணமான ஈடுபாட்டை கொண்டிருக்கவில்லை.இரண்டாயிரம்களில் விடுதலைப்புலிகள் தம்மை இலங்கை தேர்தல்-அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக (நான்கு கட்சிகளை இணைத்து)தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பின்னரான காலத்தில் தமிழருக்கு சிறந்த ஒரு தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பபானது தமிழ்மக்களின் இனப்பிரச்சனை மீதான தமது இரட்டை நிலைப்பாட்டினால் தனது பாத்திரத்தினின்றும் விலகியிருக்கின்றது.மறுபுறத்தே இணக்க அரசியல் எனும் பெயரில் தமிழ்த்தேசியத்துக்கு எதிராக இருக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆகியவை வழமை போலவே இப்பொழுதும் தமிழ் மக்களின் உரிமைகளை விற்று சலுகைகளை பெற்று வாழ்ந்து வருகின்றன.இடையிட்டு முளைத்த மேலும் சில கட்ட்சிகளும் தமது இருப்ப தக்கவைத்துக்கொள்ள போராடி வருகின்றன.இங்கு தலைமைத்துவ வெற்றிடத்தை அப்படியே வைத்துக்கொண்டு கட்சிகள் தமது இருப்பை உறுதிப்படுத்தவே போராடுகின்றன.முக்கியமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வாலையும் ஏனையோருக்கு தலையையும் காடுவதை நிறுத்தி தமிழ் மக்களுக்கு உண்மையான உணர்வுபூர்வமான தலைமைத்துவத்தை வழங்க முன்வர வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றுப்படுத்துகை முக்கியமாம் தான் ,அதற்கு மாற்றுக்கருத்துகள் இருக்க மாட்டாது.ஆனால் ஆற்றுப்படுத்துகை எனும் பெயரில் எமது பண்பாடுகளை அழித்து அபிவிருத்தி எனும் பெயரில் எமது கலாச்சாரங்களை அளிப்பதை நிறுத்தி தமிழருக்கான தேர்வினை பெற்றுக்கொடுக்க தமிழ் கட்சிகள் முன்வர வேண்டும்.ஒரு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு அந்த பிரச்சனைக்கான தீர்வைவிட சிறந்த ஆறுதல் எங்கும் கிடைக்கப்போவதில்லை.

தொடர்ந்தும் தமது பொறுப்புக்களிலிருந்து பொறுப்பானவர்கள் விலகும் போது பதிலீடுகள் தேவைகள் அதிகரிக்கத்தான் செய்யும்.

Thursday 26 July 2012

தும்மல்.

தும்மினாலே-எனக்கு
நினைப்பது நீ
என்பதே நினைப்பு.

Friday 20 July 2012

பேரழகு

ஆடை பாதியழகு
மீதியே போதும்
அவள் பேரழகு.

Thursday 19 July 2012

என்காதல்...


கண்டவுடன் அல்ல-காதல்
வந்தவுடன்
நான்கொள்ள நீயே இல்லை....

கற்றையாய் எழுதிட
நினைவுகள் பல
இருந்தும்
ஒற்றையாய்
உனைபார்த்த கணங்களும்
ஒய்யாரமாய்
எனைப்பார்த்த கண்களும்
பசுமையாய்-என்மன
பாலைவனத்தில்...

ஏட்டுக்காதலெல்லாம்
தேனாய் இனித்திட 
தேளாய் கொட்டுகிறது
என்காதல்மட்டும்.

Monday 16 July 2012

நான் பார்த்த படங்கள்......



கடந்த ஒருமதத்துக்குள் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 
வந்த திரைப்படங்கள் மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாத கதைக்களம் கொண்டவை.இரண்டு தமிழ்ப்படங்கள்(சகுனி,பில்லா2 )மற்றொன்று தெலுங்கு -மொழிமற்றப்பட்டபடம்(
நான்ஈ).முதலிரண்டு படங்களும் கதாநாயகர்களினாலேயே எதிர்பார்ப்புக்குள்ளகியிருந்தன.மாற்றியது வித்தியாசமான கதைக்காக எதிர்பார்க்கப்பட்டது.

 நான் ஈ திரைப்படமானது நானி,சமந்தா மற்றும் சுதீப் ஆகியோருடன் ஒரு ஈ(இலையான்) நடிக்க மாவீரன்(மகதீரா) இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்துள்ளது.இப்படத்தின்மீதான பெரிய எதிர்பார்ப்பிற்கான காரணம் வித்தியாசமான் அகத்தையும் இயக்குனரும் ஆகும்.வெவ்வேறு கதைக்களங்களில் வித்தியாசமான திரைக்கதையோடு படங்களை தருவதில் சிறந்த இயக்குனர் இவர்.ஸ்டுடென்ட் நம்பர் 1 ,கஜேந்திரா,மாவீரன் மற்றும் மரியாதை ராமண்ணா இவைகள் இவரின் கைவண்ணத்தில வெளியான சில.எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகத்தான் இருந்தது.அதை பூர்த்திசெய்யும் வகையில் படம் இருந்ததோடு படத்தில் பலவிசயங்கள் பாராட்டும்படியிருந்தன குறைகள் சில காணப்பட்ட போதிலும்.



ஆரம்பத்தில் சிலநிமிடங்களே வந்து போனாலும் படம்முழுக்க இழையோடும்,படத்தை இழுத்து செல்லும் நானி-சமந்தா இடையேயான காதல்/ரொமான்ஸ்.இன்னும்கொஞ்சம் காதல் கட்சிகளை நீட்டியிருக்கலாம்.
ரத்தத்தை அதிகமாக காட்டாமல்/காடுக்கத்து கத்தாமல் ஸ்டைலிஷாக வந்து வில்லத்தனம் செய்வதிலாகட்டும் ,ஈ க்கு பயந்து போராடும்போதாகட்டும் இல்லை சமந்தாவை அடைய வெறியாய் அலையும் போதாகட்டும் ஜொலிக்கிறார் சுதீப் இயக்குனருடன் சேர்ந்து.
 சில இடங்களைத்தவிர கிராபிக்ஸ் என்பது பெரிதாக தெரியவில்லை,கொஞ்சம் பிழைத்தாலும் காட்டூன் பார்க்கும் உணர்வைத்தந்துவிடும்.
அதையுணர்ந்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில் பார்க்கக்கூடிய படமாக வெளிவந்திருக்கிறது நான் ஈ.




துறு துறு நடிப்புமே படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தவை.எதிர்பார்த்தவைகள் அனைத்துமே பிசுபிசுத்துவிட படம் புஷ்வானமாகிப்போனது.உலகம் முழுவதும்  1500 அரங்குகளில் திரையிடப்பட்ட சகுனி பெரிய தோல்வியாக தயாரிப்பளருக்கு இருக்கப்போவதில்லை.ஆனால் கார்த்தியின் முதல் தோல்விப்படமாக பதிவாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.கார்த்தியிடமிருந்து நல்ல கதையம்சமுள்ள படங்களை இத்தோல்வி தரக்கூடும்(




பில்லா 2 அஜித்,பார்வதி ஓமனக்குட்டன்,புருணா அப்துல்லா,சுதன்சனு பாண்டே மற்றும் வித்யுத் ஜாம்வெல் ஆகியோர் நடிக்க  'உன்னைப்போல் ஒருவன்' சக்ரி டோல்டி இயக்க இரா.முருகன் மற்றும் முகம்மது ஜாபர் ஆகியோரின் வசனத்தில் யுவனின் இசையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்களோடு வந்துள்ள படம்.இந்த படத்தின் பெயர் முதற்கொண்டு இயக்குனர் வரை எல்லாமே எதிர்பார்ப்பிற்கு காரணமாக இருந்த போதும் அஜித் எனும் தனி மனிதரே அதிகம் எதிர்பார்க்க வைத்தார்.அவர்நடித்த பில்லாவின் மிகப்பெரிய வெற்றி ,மங்காத்தாவின் வெற்றி ஆகியவை காரணமாக இருக்கலாம்.
                                                                அஜித் தனது ரசிகர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றிவிட்டார் என்பதே நிதர்சனம்.நடிப்பில் கவனம் செலுத்துமளவுக்கு கதைத்தெரிவில் அஜித் கவனம் செலுத்துவதில்லை.தெளிவில்லாத மற்றும் நம்பமுடியாத கதையோட்டம்,சீரற்ற திரைக்கதை மற்றும் பொருத்தமற்ற கதாநாயகிகள் ஆகியவை எதிர்மறையான பெறுகைக்கு காரணங்களாக இருக்கும்.அஜித்திற்கான ஒப்பனிங்கும் அதிகளவான திரையரங்குகளும் வசூலில் படத்தை காப்பாற்றி விடும்.அனால் ரசிகர்களை திருப்திப்படுத்த தீனா ,வரலாறு போன்ற வித்தியாசமான படங்களை தருவாரா அஜித்....??? 

நல்லவேளை ஒரேநாளில் சகுனியும் பில்லாவும் வெளிவர இருந்தன ,வந்திருந்தால் இரண்டு படங்களின் பாடும் அம்போதான்.......

Sunday 15 July 2012

டெங்குவினால் நானிழந்த உறவு......:'(((((



வழமையாக பல்கலைக்கழக வாழ்க்கை பலநினைவுகளை விட்டுச்செல்லும்,ஆனால் பல்கலைக்கழக வாழ்க்கையையே நினைவாக விட்டுச்சென்றான் தம்பி கிரிதரன்.அழைத்துக்கொள்ள,அடித்துக்கொள்ள அவணியில் அவனில்லை என்றபோதும் உரிமையுடன் கொண்டாடிய உறவும் அவனதுதான் செய்வதறியாது திண்டாடிய பிரிவும் அவனதுதான். 


                                                     நம்மில் பலரால் பத்தோடு பதினொன்றாக எடுத்துக்கொள்ளப்படும் டெங்கு காச்சல்தான் அவனது இருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து.டெங்கு நோயை பற்றி நிறையவே தெளிவிருந்தும் நாங்கள் விடுகின்ற சிறு தவறுகள் உயிரிழப்புவரை எம்மை இட்டு செல்கிறது.ஒருவேளை காய்ச்சலின் ஆரம்பநிலையிலையே கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்று கிரி எங்களுடன் இருந்திருப்பான்.இந்த பதிவிற்கான தேவைகூட இருந்திருக்காது.

கொழும்பின் புறநகர்ப்பகுதியான தெஹிவளை டெங்குக்கு பெயர்போன இடம்.இங்கயே கிரியின் வாழ்விடமும் அமைந்திருந்தாலும் கடந்த இரண்டுவருடமாக அவனை  டெங்கின் கஷ்டமோ நஷ்டமோ அவனை பாதித்ததில்லை. எந்த நேரத்திலும் சிரித்த,தன்னிலையை பிரதிபலிக்காத முகம் அவனது ,எதையுமே விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் இயல்பு,தமிழ் மற்றும் தேசியத்தில் முக்கியமாக தலைவரிடத்தில் அளவில்லா பற்று இவைகள் நான் கிரியிடமிருந்து அவதானித்தவைகள்.கலகலப்புக்கு பஞ்சமிருக்காது, கைகலப்பிற்கு இடமேயிருக்கது அவன் பக்கத்திலிருந்தால்.சிரித்தே சமாளிக்கும்,சமாதானப்படுத்தும் வித்தை தெரிந்தவன் அவன்.

அவன் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்பதை நான் அறிந்திருந்த நேரம் அவன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போய்விட்டிருந்தான்.அதுகூட மறுநாள் அவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே தெரிந்திருந்தது எனக்கு.நான் யாழ்ப்பாணம் புறப்பட தயாராகும் போது அவனது நிலைமை கவலைக்கிடமென செய்தி வந்தது.நான் வைத்தியசாலைக்கு சென்றபோது,அவன் சுயநினைவின்றி,அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்தான்.பார்த்து கலங்க மட்டுமே முடிந்தது என்னால்.வேறென்ன செய்ய முடியும்......?????? 

மருத்துவர்கள் கிரிதரனின் சிறுநீரகங்கள் மற்றும் மூளை பாதிப்படைந்துள்ளதாகவும்,தாங்கள் இயலுமானவரை போராடுவதாக தெரிவித்திருந்தனர்.எங்களுக்குள் ஒரு நப்பாசை கிரி மீண்டுவருவானென்று.உணர்ந்துகொள்ளும் ஒரேயிடம் வைத்தியசாலைதான். இருந்த ஒரேவழி இறைவனிடம் கெஞ்சுவதுதான்,செய்தோம்.கடவுளிற்கு கேட்கவில்லைபோலும்.மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் அவனது நண்பன் தொலைபேசியில் கிரி நம்மை விட்டுச்சென்றுவிட்டான் என்று சொன்னபோது என்னால் அழமட்டுமே முடிந்திருந்தது.

இழப்புக்கள் எனக்கு புதியவையில்லைத்தான் ஆனால் மனதுக்கு நெருங்கியவர்களின் பிரிவுகள் எப்போதுமே எம்மை உடைத்துவிடும் வல்லமை கொண்டவை.

டெங்கு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலம் இப்படியான உறவுகளின் இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளமுடியும்.டெங்கு என்பது மாற்றமுடியாத நோயல்ல,சிறந்த பராமரிப்பு மற்றும் ஓய்வு மூலம் குணப்படுத்தமுடியும்.அனால் கவனமின்மையானது மரணத்திற்கு வழிவகுக்கக்கூடும்.கூடுதலானவரை கவனம்செலுத்துங்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் மீது மட்டுமல்ல நீங்கள் இருக்கும்  சுற்றுப்புறத்தின் மீதும்.நுளம்பு பெருகக்கூடிய இடங்களை தேடி அழிப்பதோடு மருந்து தெளிக்கப்பட்ட நுளம்புவளைகளை பயன்படுத்துவதன் மூலம் நுளம்புகளிடமிருந்தும் அவற்றினால் பரப்பப்படும் நோய்களிலிருந்தும் உங்களை காத்துக்கொள்ளலாம்.

டெங்கு நோய்க்கிருமியை(வைரஸை) காவிச்செல்லும் நுளம்பானது (Aedes Aegypti) பொழுதுசாயும் மற்றும் பொழுது புலரும் நேரங்களிலேயே  அதிகமாக மனிதர்களை தாக்குகிறது.ஆகவே காலையில் 6-10 மணிவரையிலும் மாலையில் 4-8 மணிவரையிலும் இந்த நுளம்பிடமிருந்து உங்களை காத்துக்கொள்ளும்முகமாக உடலை மூடக்கூடிய ஆடைகளை அணிந்து கொள்ளுதல் சாலச்சிறந்ததாகும்.

காய்ச்சலுடன் தலைவலி/தலையிடி,கண்களில் பின்புறம் வலி,உடம்பு நோவு,வாயிற்று வலி,மிகுந்த அசதி இவைகள் டென்குக்கான சாதாரண அறிகுறிகள்.உங்களுக்கு இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டாலோ இல்லை டெங்கு உங்களை தாக்கியுள்ளது என சந்தேகம் வந்தாலோ உடனே மருத்துவரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.உங்கள் இரத்தத்தில் வெள்ளையணுக்கள் ஒருலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கு குறைவாக காணப்படுமிடத்து நீங்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக கருதப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவீர்கள்.

கிரிதரன் போன்ற உறவுகளைக்காக்க இப்படியான செய்திகளை பகிர்வதோடல்லாமல்,முடிந்தவரை இவற்றை பின்பற்றுவோம்.