ஒரு இனத்தையோ அல்லது ஒரு சமூகத்தையோ உருவழிப்பதற்கு பலவழிகள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தனிநபர்களால் அல்லது ஒரு கூட்டத்தினரால் கைக்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன ,கைக்கொள்ளப்படுகின்றன.இவற்றில் சிறந்த வினைத்திறனான வழியானது அந்த சமூகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அழிப்பது அல்லது உருமாற்றுவது.ஏனெனில் காலாச்சாரம் மற்றும் பண்பாடுமீதான தாக்குதலானது தனிமனிதனை உடனடியாக பாதகாமாக உணரக்கூடிய வகையில் சென்றடையாது.அவன் பாதகமென்று உணரும் தறுவாயில் அவனிருக்கும் கலாச்சாரம் வேறு ஒரு பரினமத்தில் இருக்கும்.அதோடு கலாச்சார மாற்றமானது பதின்ம பராயமானவர்களிடமிருந்து ஆரம்பிக்கும் போது ஈர்க்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் சென்றடையும் வீதம் அதிகமாக இருக்கும்.
அதுவும் எம்மைப்போன்ற இறுக்கமான ஒரு கட்டமைப்புக்குள்ளிருந்து சடுதியாக வெளிவந்த சமூகத்திடம் நாகரிக விருத்தி என்கிற பெயரில் நச்சுவிதைகள் விதைக்கப்படும் போது அதன்பால் சமூகம் ஈர்க்கப்படுவது நடைபெறக்கூடிய, நடைபெறுகின்ற ஒரு விடயமாகும்.அதனால் இப்பேர்ப்பட்ட சமூகத்தை சரியாக வழிநடாத்தி செல்லக்கூடிய தலைமையொன்று இன்றைய சூழ்நிலையில் தமிழ்ச்சமூகத்திற்கு அவசியமாகும்.ஆனால் எம்மை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்லிக்கொள்ளும் அரசியல் சார்ந்த சாராத அமைப்புக்கள் "எரியும் வீட்டில் கொள்ளிக்கட்டை புடுங்குபவர்களாகவே" இருக்கின்றனர்.இவர்கள் எம்மை வழிநடாத்துவார்களேன்றோ எமக்காக போராடுவார்களேன்றோ மக்களால் நம்பக்கூடிய அளவிற்கு இவர்கள் எதையும் இதுவரை செய்யவில்லை.
தமது இறுதி இருப்புவரையிலும் தமிழ் மக்களிற்கான அரசியல் தலைமையையும் சேர்த்தே வழங்கியிருந்தார்கள் விடுதலைப்புலிகள்.யுத்த அரசியல் மேலோங்கியிருந்த காலங்களில் தேர்தல் அரசியல் உரிமை-கடமை பற்றிய எந்தவொரு எதிர்பார்ப்பும் அற்றவர்களாகவே தமிழர்கள் வாழ்ந்திருந்தார்கள்.ஏனெனில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்த மக்களுக்கு இலங்கை அரசியலென்பது தம்மோடு தொடர்புபட்ட உலக அரசியல் போலவே விளங்கியது.அதனால் அவர்கள் இலங்கை அரசியல் பற்றி ஆர்வம் கொண்டிருந்தாலும் அதில் பூரணமான ஈடுபாட்டை கொண்டிருக்கவில்லை.இரண்டாயிரம்களில் விடுதலைப்புலிகள் தம்மை இலங்கை தேர்தல்-அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக (நான்கு கட்சிகளை இணைத்து)தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பின்னரான காலத்தில் தமிழருக்கு சிறந்த ஒரு தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பபானது தமிழ்மக்களின் இனப்பிரச்சனை மீதான தமது இரட்டை நிலைப்பாட்டினால் தனது பாத்திரத்தினின்றும் விலகியிருக்கின்றது.மறுபுறத்தே இணக்க அரசியல் எனும் பெயரில் தமிழ்த்தேசியத்துக்கு எதிராக இருக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆகியவை வழமை போலவே இப்பொழுதும் தமிழ் மக்களின் உரிமைகளை விற்று சலுகைகளை பெற்று வாழ்ந்து வருகின்றன.இடையிட்டு முளைத்த மேலும் சில கட்ட்சிகளும் தமது இருப்ப தக்கவைத்துக்கொள்ள போராடி வருகின்றன.இங்கு தலைமைத்துவ வெற்றிடத்தை அப்படியே வைத்துக்கொண்டு கட்சிகள் தமது இருப்பை உறுதிப்படுத்தவே போராடுகின்றன.முக்கியமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வாலையும் ஏனையோருக்கு தலையையும் காடுவதை நிறுத்தி தமிழ் மக்களுக்கு உண்மையான உணர்வுபூர்வமான தலைமைத்துவத்தை வழங்க முன்வர வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றுப்படுத்துகை முக்கியமாம் தான் ,அதற்கு மாற்றுக்கருத்துகள் இருக்க மாட்டாது.ஆனால் ஆற்றுப்படுத்துகை எனும் பெயரில் எமது பண்பாடுகளை அழித்து அபிவிருத்தி எனும் பெயரில் எமது கலாச்சாரங்களை அளிப்பதை நிறுத்தி தமிழருக்கான தேர்வினை பெற்றுக்கொடுக்க தமிழ் கட்சிகள் முன்வர வேண்டும்.ஒரு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு அந்த பிரச்சனைக்கான தீர்வைவிட சிறந்த ஆறுதல் எங்கும் கிடைக்கப்போவதில்லை.
தொடர்ந்தும் தமது பொறுப்புக்களிலிருந்து பொறுப்பானவர்கள் விலகும் போது பதிலீடுகள் தேவைகள் அதிகரிக்கத்தான் செய்யும்.