Friday 14 December 2012

பூந்தோட்ட மழை.

துமித்திட துடித்திடும் என்வானம்
நனைந்திட ஏங்கிடும் பூமியுன்-மௌனக்
காற்று வந்தலைக்கிறது
என்மழை மேகங்களை...!

பாய்கின்ற நதியேந்துமென்னை-ஆனாலும்
பூக்கின்ற உன் தழுவல்தானே
நான் தூறிடக்காரணம்...!!

என்னில் ஒருதுளி
உன்னில்பட்டு
ஆகாதோ பன்னீர்த்துளி...!!!

பிரதியீடு.

மயிலின் அசைவும் குயிலின் இசையும்
வயலின் அழகும்-இன்னும் 
வாழ்ந்துகொண்டிருகின்றன
வலைத்தளங்களினூடே...!!!

Saturday 24 November 2012

துயிலுமில்லங்கள்

விதைத்த இடங்களை
உழுதன எருமைகள்
அழுகின்றோம்
நீர் பாய்(ச்சு)வதற்காய்...!!!

Sunday 19 August 2012

பேச்சின்றி.

மடிந்திருந்தால் நேற்றோடு
முடிந்திருக்கும்
காற்றோடு கலந்திருந்தால்.

கற்றையோடு
ஒற்றையாக-உன்
நெற்றிப்பரப்பில்-என்
வெற்றுப்பார்வை...!!!

கைப்பிடிக்கும் தூரம்தான்
ஆனால்...
வெற்றுப்பைகள் நெஞ்யையழுத்த
காற்றுப்பைகள் வேகமாய்...

நமதெல்லாம்-இனி
தனித்தனியாக
நான்மட்டும் தன்னந்தனியாக...

தொலைந்துபோகிறேன்
பேச்சின்றி
தொலைபேசியுமின்றி ...

Tuesday 14 August 2012

குற்றம்.

எழுத்தில் கொள்ளாது
நாம்பட்ட வலிகள் இருந்தும்
எழுதையில் கனத்திடும்
படிக்கையில் துடித்திடும்
மறுநாளே அனைத்தையும் மறந்திடும்
பாழாய்ப்போன மனது...!

குண்டில் தப்பி குண்டர்கையில்...!
பால்மணம் மாறா பச்சிளம் சிட்டுகள்
பாழாக்கியவன் மீண்டு(ம்)வர
வாதாடி திறமைகாட்டும்
கறுப்பாடை காவலர்கள்...!

படித்தவன் பக்கம்நிக்க-கயவன்
பக்கம்சார்ந்து சட்டம்செல்ல
பயமின்றி குற்றம்
தண்டம் கட்டினால் போதும்...

பெற்றவள்-பிஞ்சை
பற்றிகொடுத்து கதறுகையில்
வல்லூறை காப்பாற்ற
வல்லவர்கள் சேர்கிறார்கள்.

தண்டனை வேண்டும்
தண்டிக்க மட்டுமல்ல
குற்றங்களை குறைத்திடவும்...

Tuesday 7 August 2012

மனிதம்.


எட்டணா போதுமென்றால்
ஏடெதுக்கு
எட்டியே போய்விடு
உறவெதுக்கு...?

கணினியுகத்தில்-உன்

கண்ணியம் குறைந்திட்டால்
உணர்வுகள் இறந்திட்டால்
பொறிகள்
உன்னிடம் பெற்றிடாதா?

அசேதனம்

சேதனத்தை நிரவிடும்போது
இயற்கைதன்
சமநிலை இழந்திடாதா?

மரங்கள் அருகிட

உயிர்கள் கருகிடாதா? 
உந்தன் சந்ததி
உன்னோடு சரிந்திடாதா?

பசிகொல்லும் உலகில்

காமம் முறைதாண்டும்போது
நீதிதான் தூங்கிட்டால்
மனிதம் காடேகிடாதா?

இயற்கையின் இளவல் நீதான்

மறந்திடாதே
மனிதம் உன்னியல்பேதான்
தொலைத்திடாதே
உயர்வே உழைப்பிற்தான்
சோர்ந்திடாதே...!!!

Sunday 5 August 2012

தமிழ்ச்சொற்கள் 2......

நாங்கள் தூயதமிழில் பேசாத போதும்,எழுதுவதற்கு விரும்புகின்றோம்,அப்படி விரும்பித்தேடிய சொற்களின் தொகுப்பை முன்னைய பதிவில் இட்டிருந்தேன்,இது அதன் தொடர்ச்சி....

Soft Drink -மென்பானம்
Cool Drink-குளிர்பானம்
Ice Cream-குளிர்களி
Fruit Juice-பழச்சாறு
Jam-பழப்பாகு
Biscuit-ஈரட்டி
Oxygen -உயிர்வாயு
Salon-சிகை அழககம்
Fancy House-அழகு மாடம்
Battery-மின்கலம்
Rewinding-மீளமுறுக்குதல்
Keyboard-விசைப்பலகை
Mouse-சுட்டி
Monitor-கணினித்திரை
Control Processing Unit-மையச்செயலலகு
Uninterruptible Power Supply-தடையில்லா மின்வழங்கி
Floppy Disk-நெகிழ் வட்டு
Fiber Optics-ஒளியியல் நார்
Charger-மின்னேற்றி
Brush-தூரிகை
Fine Arts-நுண்கலை
Microphone-நுணுக்குபபன்னி
Fan-விசிறி
Network-வலையமைப்பு
Typesetting-தட்டச்சு
Photo Copy-நிழற்ப்படப்பிரதி
Printers-அச்சகம்
Publications-வெளியீட்டகம்
Pen-எழுதுகோல்
Pencil-கரிக்கோல்
Book-பொத்தகம்
Grocery-பல்பொருள் வாணிபம்
Meat-புலால்
Service Station-சுத்திகரிப்பு நிலையம்
Nurse-மருத்துவ மாது
Invoice-விற்பனைச்சிட்டை
Calender-நாட்காட்டி
Minute-மணித்துளி
Second-நொடி
Daily Paper-தினசரி/நாளேடு
Police-காவல் துறை

நட்பு


தொப்புள்கொடி உறவல்ல
வெட்டியறுத்துவிட
தாலிகட்டும் சொந்தமல்ல
இரத்துப்பத்திரம்
தேவையேயில்ல...

ராக்கிகட்ட
வேண்டியதில்ல
இதுதான் உறவென்றுகூற...

உடுக்கை
இழந்தபோதும்
இடுப்பை
உடைக்கும்போதும்
யாக்கைத்தரித்த
உயிர்-எனக்கு
நம்நட்பு-அது
யாப்பில்லா உறவு.

Wednesday 1 August 2012

தமிழ்ச்சொற்கள் 1...

நாங்கள் பேசுவதற்கு பயன்படுத்தும் பெரும்பாலான வார்த்தைகள் தமிழ் இல்லை அப்படியே தமிழாக இருந்தாலும் அவை வட்டார வழக்கு சொற்களாக இருக்கும்,ஆனாலும் எழுதுவதற்கு தூயதமிழை பயன்படுத்துற/பயன்படுத்த ஆசைப்படுகிற  நிறையப்பேர் சமூக வலைத்தளங்களில இருக்கின்றோம்.அப்பிடி எழுதவேண்டியநேரங்களில தமிழ் வார்த்தைகளை  தேடித்தான் படிக்கவேண்டியிருக்கு,அப்பிடி நான் தேடிப்பெற்ற சொற்கள் இவை,பிழைகள் இருப்பின் கூறவும்.....

Technology-தொழிநுட்பம்
Computer-கணினி
Laptop-மடிக்கணினி
Calculator-கணிப்பான்
Data-தரவு
Password-கடவுச்சொல்
Information-தகவல்
Software-மென்பொருள்
Hardware-வன்பொருள்
Operating System-இயங்குதளம்
Hard Disk-வன்தட்டு
Memory-நினைவகம்
DVD(Digital video Disk)-இறுவட்டு
Photo-புகைப்படம்/நிழற்ப்படம்
Video-ஒளிப்படம்/காணொளி
CD(compact disk)-குறுவட்டு
Telephone-தொலைபேசி
Fax-தொலைநகல்
Mobile/Cell phone-செல்லிடபேசி
Smart phone-நுண்ணறி பேசி
Internet Browser-இணையத்தள உலாவி
Website-வலைத்தளம்
System-முறைமை
Cricket-துடுப்பாட்டம்
Wicket-இலக்கு
Over-பந்துப்பரிமாற்றம்
Bowling-பந்துவீச்சு
No Ball-முறையற்ற பந்து
Wide Ball-அகலப்பந்து
Office-பணிமனை
Cake-குதப்பி,அனிச்சல்

பாண்/Bread-வெதுப்பி
பணிஸ்/Bun-மென்வெதுப்பி,இனிவெதுப்பி
Bakery-வெதுப்பகம்
Cycle-மிதிவண்டி
Ambulance-நோயாளர் காவி
Car-மகிழுந்து
Bus-பேருந்து
Van/Minibus-சிற்றூர்தி
Train-தொடருந்து
Motorcycle-உந்துருளி
Auto/Three wheeler-முச்சக்கர வண்டி
Flight-வானூர்தி
Helicopter-உலங்குவானூர்தி
Court-நீதிமன்றம்
High Court-மேல்நீதிமன்றம்
Supreme Court-உச்சநீதிமன்றம்/உயர் நீதிமன்றம்
Session Court-அமர்வுநீதிமன்றம்
Magistrate Court-நீதவான் நீதிமன்றம்
Lawyer-சட்டவாளர்
Supermarket-நவீனசந்தை/சிறப்பு அங்காடி
International Airport-அனைத்துலக வானூர்தி நிலையம்

Saturday 28 July 2012

ஈழத்தமிழர் வாழ்வில் தாக்கம் செலுத்தும் தலைமைத்துவ வெற்றிடம்.


ஒரு இனத்தையோ அல்லது ஒரு சமூகத்தையோ உருவழிப்பதற்கு பலவழிகள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தனிநபர்களால் அல்லது ஒரு கூட்டத்தினரால் கைக்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன ,கைக்கொள்ளப்படுகின்றன.இவற்றில் சிறந்த வினைத்திறனான வழியானது அந்த சமூகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அழிப்பது அல்லது உருமாற்றுவது.ஏனெனில் காலாச்சாரம் மற்றும் பண்பாடுமீதான தாக்குதலானது தனிமனிதனை உடனடியாக பாதகாமாக உணரக்கூடிய வகையில் சென்றடையாது.அவன் பாதகமென்று உணரும் தறுவாயில் அவனிருக்கும் கலாச்சாரம் வேறு ஒரு பரினமத்தில் இருக்கும்.அதோடு கலாச்சார மாற்றமானது பதின்ம பராயமானவர்களிடமிருந்து ஆரம்பிக்கும் போது ஈர்க்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் சென்றடையும் வீதம் அதிகமாக இருக்கும்.

அதுவும் எம்மைப்போன்ற இறுக்கமான ஒரு கட்டமைப்புக்குள்ளிருந்து சடுதியாக வெளிவந்த சமூகத்திடம் நாகரிக விருத்தி என்கிற பெயரில் நச்சுவிதைகள் விதைக்கப்படும் போது அதன்பால் சமூகம் ஈர்க்கப்படுவது நடைபெறக்கூடிய, நடைபெறுகின்ற ஒரு விடயமாகும்.அதனால் இப்பேர்ப்பட்ட சமூகத்தை சரியாக வழிநடாத்தி செல்லக்கூடிய தலைமையொன்று இன்றைய சூழ்நிலையில் தமிழ்ச்சமூகத்திற்கு அவசியமாகும்.ஆனால் எம்மை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்லிக்கொள்ளும் அரசியல் சார்ந்த சாராத அமைப்புக்கள் "எரியும் வீட்டில் கொள்ளிக்கட்டை புடுங்குபவர்களாகவே" இருக்கின்றனர்.இவர்கள் எம்மை வழிநடாத்துவார்களேன்றோ எமக்காக போராடுவார்களேன்றோ மக்களால் நம்பக்கூடிய அளவிற்கு இவர்கள் எதையும் இதுவரை செய்யவில்லை.

தமது இறுதி இருப்புவரையிலும் தமிழ் மக்களிற்கான அரசியல் தலைமையையும் சேர்த்தே வழங்கியிருந்தார்கள் விடுதலைப்புலிகள்.யுத்த அரசியல் மேலோங்கியிருந்த காலங்களில் தேர்தல் அரசியல் உரிமை-கடமை பற்றிய எந்தவொரு எதிர்பார்ப்பும் அற்றவர்களாகவே தமிழர்கள் வாழ்ந்திருந்தார்கள்.ஏனெனில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்த மக்களுக்கு இலங்கை அரசியலென்பது தம்மோடு தொடர்புபட்ட உலக அரசியல் போலவே விளங்கியது.அதனால் அவர்கள் இலங்கை அரசியல் பற்றி ஆர்வம் கொண்டிருந்தாலும் அதில் பூரணமான ஈடுபாட்டை கொண்டிருக்கவில்லை.இரண்டாயிரம்களில் விடுதலைப்புலிகள் தம்மை இலங்கை தேர்தல்-அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக (நான்கு கட்சிகளை இணைத்து)தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பின்னரான காலத்தில் தமிழருக்கு சிறந்த ஒரு தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பபானது தமிழ்மக்களின் இனப்பிரச்சனை மீதான தமது இரட்டை நிலைப்பாட்டினால் தனது பாத்திரத்தினின்றும் விலகியிருக்கின்றது.மறுபுறத்தே இணக்க அரசியல் எனும் பெயரில் தமிழ்த்தேசியத்துக்கு எதிராக இருக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆகியவை வழமை போலவே இப்பொழுதும் தமிழ் மக்களின் உரிமைகளை விற்று சலுகைகளை பெற்று வாழ்ந்து வருகின்றன.இடையிட்டு முளைத்த மேலும் சில கட்ட்சிகளும் தமது இருப்ப தக்கவைத்துக்கொள்ள போராடி வருகின்றன.இங்கு தலைமைத்துவ வெற்றிடத்தை அப்படியே வைத்துக்கொண்டு கட்சிகள் தமது இருப்பை உறுதிப்படுத்தவே போராடுகின்றன.முக்கியமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வாலையும் ஏனையோருக்கு தலையையும் காடுவதை நிறுத்தி தமிழ் மக்களுக்கு உண்மையான உணர்வுபூர்வமான தலைமைத்துவத்தை வழங்க முன்வர வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றுப்படுத்துகை முக்கியமாம் தான் ,அதற்கு மாற்றுக்கருத்துகள் இருக்க மாட்டாது.ஆனால் ஆற்றுப்படுத்துகை எனும் பெயரில் எமது பண்பாடுகளை அழித்து அபிவிருத்தி எனும் பெயரில் எமது கலாச்சாரங்களை அளிப்பதை நிறுத்தி தமிழருக்கான தேர்வினை பெற்றுக்கொடுக்க தமிழ் கட்சிகள் முன்வர வேண்டும்.ஒரு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு அந்த பிரச்சனைக்கான தீர்வைவிட சிறந்த ஆறுதல் எங்கும் கிடைக்கப்போவதில்லை.

தொடர்ந்தும் தமது பொறுப்புக்களிலிருந்து பொறுப்பானவர்கள் விலகும் போது பதிலீடுகள் தேவைகள் அதிகரிக்கத்தான் செய்யும்.

Thursday 26 July 2012

தும்மல்.

தும்மினாலே-எனக்கு
நினைப்பது நீ
என்பதே நினைப்பு.

Friday 20 July 2012

பேரழகு

ஆடை பாதியழகு
மீதியே போதும்
அவள் பேரழகு.

Thursday 19 July 2012

என்காதல்...


கண்டவுடன் அல்ல-காதல்
வந்தவுடன்
நான்கொள்ள நீயே இல்லை....

கற்றையாய் எழுதிட
நினைவுகள் பல
இருந்தும்
ஒற்றையாய்
உனைபார்த்த கணங்களும்
ஒய்யாரமாய்
எனைப்பார்த்த கண்களும்
பசுமையாய்-என்மன
பாலைவனத்தில்...

ஏட்டுக்காதலெல்லாம்
தேனாய் இனித்திட 
தேளாய் கொட்டுகிறது
என்காதல்மட்டும்.

Monday 16 July 2012

நான் பார்த்த படங்கள்......



கடந்த ஒருமதத்துக்குள் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 
வந்த திரைப்படங்கள் மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாத கதைக்களம் கொண்டவை.இரண்டு தமிழ்ப்படங்கள்(சகுனி,பில்லா2 )மற்றொன்று தெலுங்கு -மொழிமற்றப்பட்டபடம்(
நான்ஈ).முதலிரண்டு படங்களும் கதாநாயகர்களினாலேயே எதிர்பார்ப்புக்குள்ளகியிருந்தன.மாற்றியது வித்தியாசமான கதைக்காக எதிர்பார்க்கப்பட்டது.

 நான் ஈ திரைப்படமானது நானி,சமந்தா மற்றும் சுதீப் ஆகியோருடன் ஒரு ஈ(இலையான்) நடிக்க மாவீரன்(மகதீரா) இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்துள்ளது.இப்படத்தின்மீதான பெரிய எதிர்பார்ப்பிற்கான காரணம் வித்தியாசமான் அகத்தையும் இயக்குனரும் ஆகும்.வெவ்வேறு கதைக்களங்களில் வித்தியாசமான திரைக்கதையோடு படங்களை தருவதில் சிறந்த இயக்குனர் இவர்.ஸ்டுடென்ட் நம்பர் 1 ,கஜேந்திரா,மாவீரன் மற்றும் மரியாதை ராமண்ணா இவைகள் இவரின் கைவண்ணத்தில வெளியான சில.எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகத்தான் இருந்தது.அதை பூர்த்திசெய்யும் வகையில் படம் இருந்ததோடு படத்தில் பலவிசயங்கள் பாராட்டும்படியிருந்தன குறைகள் சில காணப்பட்ட போதிலும்.



ஆரம்பத்தில் சிலநிமிடங்களே வந்து போனாலும் படம்முழுக்க இழையோடும்,படத்தை இழுத்து செல்லும் நானி-சமந்தா இடையேயான காதல்/ரொமான்ஸ்.இன்னும்கொஞ்சம் காதல் கட்சிகளை நீட்டியிருக்கலாம்.
ரத்தத்தை அதிகமாக காட்டாமல்/காடுக்கத்து கத்தாமல் ஸ்டைலிஷாக வந்து வில்லத்தனம் செய்வதிலாகட்டும் ,ஈ க்கு பயந்து போராடும்போதாகட்டும் இல்லை சமந்தாவை அடைய வெறியாய் அலையும் போதாகட்டும் ஜொலிக்கிறார் சுதீப் இயக்குனருடன் சேர்ந்து.
 சில இடங்களைத்தவிர கிராபிக்ஸ் என்பது பெரிதாக தெரியவில்லை,கொஞ்சம் பிழைத்தாலும் காட்டூன் பார்க்கும் உணர்வைத்தந்துவிடும்.
அதையுணர்ந்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில் பார்க்கக்கூடிய படமாக வெளிவந்திருக்கிறது நான் ஈ.




துறு துறு நடிப்புமே படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தவை.எதிர்பார்த்தவைகள் அனைத்துமே பிசுபிசுத்துவிட படம் புஷ்வானமாகிப்போனது.உலகம் முழுவதும்  1500 அரங்குகளில் திரையிடப்பட்ட சகுனி பெரிய தோல்வியாக தயாரிப்பளருக்கு இருக்கப்போவதில்லை.ஆனால் கார்த்தியின் முதல் தோல்விப்படமாக பதிவாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.கார்த்தியிடமிருந்து நல்ல கதையம்சமுள்ள படங்களை இத்தோல்வி தரக்கூடும்(




பில்லா 2 அஜித்,பார்வதி ஓமனக்குட்டன்,புருணா அப்துல்லா,சுதன்சனு பாண்டே மற்றும் வித்யுத் ஜாம்வெல் ஆகியோர் நடிக்க  'உன்னைப்போல் ஒருவன்' சக்ரி டோல்டி இயக்க இரா.முருகன் மற்றும் முகம்மது ஜாபர் ஆகியோரின் வசனத்தில் யுவனின் இசையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்களோடு வந்துள்ள படம்.இந்த படத்தின் பெயர் முதற்கொண்டு இயக்குனர் வரை எல்லாமே எதிர்பார்ப்பிற்கு காரணமாக இருந்த போதும் அஜித் எனும் தனி மனிதரே அதிகம் எதிர்பார்க்க வைத்தார்.அவர்நடித்த பில்லாவின் மிகப்பெரிய வெற்றி ,மங்காத்தாவின் வெற்றி ஆகியவை காரணமாக இருக்கலாம்.
                                                                அஜித் தனது ரசிகர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றிவிட்டார் என்பதே நிதர்சனம்.நடிப்பில் கவனம் செலுத்துமளவுக்கு கதைத்தெரிவில் அஜித் கவனம் செலுத்துவதில்லை.தெளிவில்லாத மற்றும் நம்பமுடியாத கதையோட்டம்,சீரற்ற திரைக்கதை மற்றும் பொருத்தமற்ற கதாநாயகிகள் ஆகியவை எதிர்மறையான பெறுகைக்கு காரணங்களாக இருக்கும்.அஜித்திற்கான ஒப்பனிங்கும் அதிகளவான திரையரங்குகளும் வசூலில் படத்தை காப்பாற்றி விடும்.அனால் ரசிகர்களை திருப்திப்படுத்த தீனா ,வரலாறு போன்ற வித்தியாசமான படங்களை தருவாரா அஜித்....??? 

நல்லவேளை ஒரேநாளில் சகுனியும் பில்லாவும் வெளிவர இருந்தன ,வந்திருந்தால் இரண்டு படங்களின் பாடும் அம்போதான்.......

Sunday 15 July 2012

டெங்குவினால் நானிழந்த உறவு......:'(((((



வழமையாக பல்கலைக்கழக வாழ்க்கை பலநினைவுகளை விட்டுச்செல்லும்,ஆனால் பல்கலைக்கழக வாழ்க்கையையே நினைவாக விட்டுச்சென்றான் தம்பி கிரிதரன்.அழைத்துக்கொள்ள,அடித்துக்கொள்ள அவணியில் அவனில்லை என்றபோதும் உரிமையுடன் கொண்டாடிய உறவும் அவனதுதான் செய்வதறியாது திண்டாடிய பிரிவும் அவனதுதான். 


                                                     நம்மில் பலரால் பத்தோடு பதினொன்றாக எடுத்துக்கொள்ளப்படும் டெங்கு காச்சல்தான் அவனது இருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து.டெங்கு நோயை பற்றி நிறையவே தெளிவிருந்தும் நாங்கள் விடுகின்ற சிறு தவறுகள் உயிரிழப்புவரை எம்மை இட்டு செல்கிறது.ஒருவேளை காய்ச்சலின் ஆரம்பநிலையிலையே கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்று கிரி எங்களுடன் இருந்திருப்பான்.இந்த பதிவிற்கான தேவைகூட இருந்திருக்காது.

கொழும்பின் புறநகர்ப்பகுதியான தெஹிவளை டெங்குக்கு பெயர்போன இடம்.இங்கயே கிரியின் வாழ்விடமும் அமைந்திருந்தாலும் கடந்த இரண்டுவருடமாக அவனை  டெங்கின் கஷ்டமோ நஷ்டமோ அவனை பாதித்ததில்லை. எந்த நேரத்திலும் சிரித்த,தன்னிலையை பிரதிபலிக்காத முகம் அவனது ,எதையுமே விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் இயல்பு,தமிழ் மற்றும் தேசியத்தில் முக்கியமாக தலைவரிடத்தில் அளவில்லா பற்று இவைகள் நான் கிரியிடமிருந்து அவதானித்தவைகள்.கலகலப்புக்கு பஞ்சமிருக்காது, கைகலப்பிற்கு இடமேயிருக்கது அவன் பக்கத்திலிருந்தால்.சிரித்தே சமாளிக்கும்,சமாதானப்படுத்தும் வித்தை தெரிந்தவன் அவன்.

அவன் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்பதை நான் அறிந்திருந்த நேரம் அவன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போய்விட்டிருந்தான்.அதுகூட மறுநாள் அவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே தெரிந்திருந்தது எனக்கு.நான் யாழ்ப்பாணம் புறப்பட தயாராகும் போது அவனது நிலைமை கவலைக்கிடமென செய்தி வந்தது.நான் வைத்தியசாலைக்கு சென்றபோது,அவன் சுயநினைவின்றி,அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்தான்.பார்த்து கலங்க மட்டுமே முடிந்தது என்னால்.வேறென்ன செய்ய முடியும்......?????? 

மருத்துவர்கள் கிரிதரனின் சிறுநீரகங்கள் மற்றும் மூளை பாதிப்படைந்துள்ளதாகவும்,தாங்கள் இயலுமானவரை போராடுவதாக தெரிவித்திருந்தனர்.எங்களுக்குள் ஒரு நப்பாசை கிரி மீண்டுவருவானென்று.உணர்ந்துகொள்ளும் ஒரேயிடம் வைத்தியசாலைதான். இருந்த ஒரேவழி இறைவனிடம் கெஞ்சுவதுதான்,செய்தோம்.கடவுளிற்கு கேட்கவில்லைபோலும்.மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் அவனது நண்பன் தொலைபேசியில் கிரி நம்மை விட்டுச்சென்றுவிட்டான் என்று சொன்னபோது என்னால் அழமட்டுமே முடிந்திருந்தது.

இழப்புக்கள் எனக்கு புதியவையில்லைத்தான் ஆனால் மனதுக்கு நெருங்கியவர்களின் பிரிவுகள் எப்போதுமே எம்மை உடைத்துவிடும் வல்லமை கொண்டவை.

டெங்கு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலம் இப்படியான உறவுகளின் இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளமுடியும்.டெங்கு என்பது மாற்றமுடியாத நோயல்ல,சிறந்த பராமரிப்பு மற்றும் ஓய்வு மூலம் குணப்படுத்தமுடியும்.அனால் கவனமின்மையானது மரணத்திற்கு வழிவகுக்கக்கூடும்.கூடுதலானவரை கவனம்செலுத்துங்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் மீது மட்டுமல்ல நீங்கள் இருக்கும்  சுற்றுப்புறத்தின் மீதும்.நுளம்பு பெருகக்கூடிய இடங்களை தேடி அழிப்பதோடு மருந்து தெளிக்கப்பட்ட நுளம்புவளைகளை பயன்படுத்துவதன் மூலம் நுளம்புகளிடமிருந்தும் அவற்றினால் பரப்பப்படும் நோய்களிலிருந்தும் உங்களை காத்துக்கொள்ளலாம்.

டெங்கு நோய்க்கிருமியை(வைரஸை) காவிச்செல்லும் நுளம்பானது (Aedes Aegypti) பொழுதுசாயும் மற்றும் பொழுது புலரும் நேரங்களிலேயே  அதிகமாக மனிதர்களை தாக்குகிறது.ஆகவே காலையில் 6-10 மணிவரையிலும் மாலையில் 4-8 மணிவரையிலும் இந்த நுளம்பிடமிருந்து உங்களை காத்துக்கொள்ளும்முகமாக உடலை மூடக்கூடிய ஆடைகளை அணிந்து கொள்ளுதல் சாலச்சிறந்ததாகும்.

காய்ச்சலுடன் தலைவலி/தலையிடி,கண்களில் பின்புறம் வலி,உடம்பு நோவு,வாயிற்று வலி,மிகுந்த அசதி இவைகள் டென்குக்கான சாதாரண அறிகுறிகள்.உங்களுக்கு இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டாலோ இல்லை டெங்கு உங்களை தாக்கியுள்ளது என சந்தேகம் வந்தாலோ உடனே மருத்துவரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.உங்கள் இரத்தத்தில் வெள்ளையணுக்கள் ஒருலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கு குறைவாக காணப்படுமிடத்து நீங்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக கருதப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவீர்கள்.

கிரிதரன் போன்ற உறவுகளைக்காக்க இப்படியான செய்திகளை பகிர்வதோடல்லாமல்,முடிந்தவரை இவற்றை பின்பற்றுவோம்.

Tuesday 26 June 2012

இலவம்பஞ்சல்ல...


கவியும் இருளோடு
கனத்திடும் இதயம்
காவிய-நாயகன் இல்லையென்று
கானக-நரிகள் நர்த்தனமாடும்

வரிகள்தாண்டி
வரிப்புலி வரவேண்டும்
வாடிய உள்ளங்கள்
வனப்போடு வாழ்ந்திட

சில்லென்ற பனியோடு
சிலிர்ந்திட விடியல்
சிறகின்றியே மனமும்
சிறைதாண்டிடும்

இலவம்பஞ்சல்ல-எம்
இதயம் வேண்டிநிற்கும்
ஈழமென்று
ஈனர்களும் அறிந்திடவேண்டும்...!!!

Tuesday 19 June 2012

இலங்கையும் பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் போட்டி தொடரும்....




உலகக்கிண்ணம் முதலே தன்னை விமர்சித்த ரசிகர்களுக்கும் ரசிகரல்லாதோருக்கும் அவர்கள் எதிர்பாராத வெற்றியொன்றை பதிலாக அளித்திருக்கிறது இலங்கையணி.கடைசியாக நடைபெற்ற சிலதொடர்களில்(ஆசியக்கிண்ணம் உள்ளிட்ட) சோபிக்காமல் வந்த அல்லது தொடர்களின்(முத்தரப்புத்தொடர்,உலகக்கிண்ணம் உள்ளிட்ட) வெற்றிக்கனிகளை பறிக்கமுடியாமல் தவித்து வந்த இலங்கை நடைபெற்று முடிந்திருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அந்தக்குறையை தீர்த்துள்ளது.

ஐ.பி.எல் தொடரிலும் மலிங்க தவிர்ந்த இலங்கை வீரர்களின் ஆதிக்கம் குறைவாகவே காணப்பட்டது,அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானின் கை மிகவும் ஓங்கியே காணப்பட்டது(பி.பி.எல் இலும் கூட),எனவே இந்த தொடரில் இலங்கை படுதோல்வியை சந்திக்கும் என எல்லோராலும் எதிர்வுகூறப்பட்டது.ஆனாலும் அந்தக்கூற்றுக்களை தகர்த்துள்ளது இலங்கையின் வெற்றி.தொடர்முழுவதும் அனுபவ வீரர்களோடு இளைய வீரர்களும் தமது திறமையை காட்டியிருந்தனர்.அதற்கு உதாரணமாக தொடர்நாயகன் பெரேரா,இறுதியாட்டநாயகன் மத்தியூஸ்,திரிமன்னே ,சந்திமால் ஆகியோரை குறிப்பிடலாம்.
இலங்கை பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியிருந்தாலும்,தொடர்ந்துவந்த போட்டிகளில் பிரகாசித்துள்ளது.
முதற்போட்டியில் நாணயச்சுழற்ச்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை தெரிவுசெய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்கள் நிறைவில் 135 ஓட்டங்களை பெற்றிருந்தது,இதில் சந்திமால் ஆட்டமிழக்காமல் 42(73),குலசேகர 18(46),பெரேரா 17(33) ,தரங்க 10(27) ஆகியோர் மட்டும் இரட்டையிலக்க ஓட்டத்தினை எடுத்தனர்.பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக குல் ,சமி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களினையும் ஹபீஸ் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.பதிலுக்குத்துடுப்பாடிய பாகிஸ்தான் 47 பந்துகள் மீதமிருக்க ஆறு விக்கெட்டுக்களால் வெற்றியை பதிவு செய்தது.பந்துவீச்சில் மலிங்க,குலசேகர,ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.ஆட்டநாயகனாக குல் தெரிவுசெய்யப்பட்டார். 

இரண்டாவது ஒருநாள் போட்டியும் அதே மைதானத்திலேயே நடைபெற்றது.நாணயச்சுழற்ச்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை தெரிவுசெய்த இலங்கை 50 பந்துவீச்சுப்பரிமாற்ற நிறைவில் 280 ஓட்டங்களை பெற்றிருந்தது,இதில் டில்ஷான் ஆட்டமிழக்காமல் 119(139) ஓட்டங்களையும்,மகேல 53(45) ஓட்டங்களையும்,சந்திமால் 32(51), பெரேரா ஆட்டமிழக்காமல் 24(14) ஓட்டங்களையும் எடுத்தனர்.பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக தன்வீர்,அப்ரிடி,அஜ்மல்,ஹபீஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தனர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்காக அஸார் அலி 96(119)தனியாக போராடிய போதும் தோல்வியை தடுக்க முடியாது போனது.பந்துவீச்சில் இலங்கை சார்பாக பெரேரா 6 விக்கெட்டுகளினையும் மலிங்க,குலசேகர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளினையும் வீழ்த்தியிருந்தனர்.சிறப்பாட்டக்காரராக பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.
            
               சஜீவ

மூன்றாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.இந்த போட்டியில் இலங்கை 34 வயதான சஜீவ வீரக்கோன் என்ற இளம்(?) சுழல்பந்து வீச்சாளரை அறிமுகப்படுத்தியது. நாணயச்சுழற்ச்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 .2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களினை இழந்து 12 ஓடடங்களை பெற்றிருந்த போது குறுக்கிட்ட மழையால் போட்டி இரத்துச்செய்யப்பட்டது.அப்போது குலசேகர மற்றும் மலிங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தனர்,அலி 7(25) மற்றும் ஹபீஸ் 0(2) ஆகியோர் ஆட்டமிழந்து செல்ல களத்தில் சபீக் 5(26) மற்றும் மிஸ்பா 0(3) ஆகியோர் இருந்தனர்.


நான்காவது போட்டியும் அதே மைதானத்திலேயே நடைபெற்றது,நாணயச்சுழற்ச்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தையும் பின்னர் அதிரடியும் காட்ட 50 ஓவர்கள் முடிவில் 243 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது,இதில் சங்க 97 (130) ,மகேல 40(50) எடுத்திருந்தனர்.பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக தன்வீர்,அஜ்மல்,ஹபீஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களினையும் குல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.பதிலுக்காடிய பாகிஸ்தானில் அஸார் அலி 81(126),மிஸ்பா 57(77),சபிக் 25(34),அஜ்மல் 12(14),யூனுஸ் கான் 1(11) ஆகியோரே ஓட்டம்/ஓட்டங்கள் பெற்றவர்கள் மற்றவர்கள் பூச்சியத்துடன் வெளியேறினார்கள்.பந்துவீச்சில் பெரேரா ஹட்ரிக் அடங்கலாக நான்கு விக்கெட்டுக்களினையும்,மலிங்க 2 விக்கெட்டுக்களினையும்,குலசேகர ,மத்தியூஸ்,வீரக்கோன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் சரித்தார்கள்.ஆட்டநாயகன் விருதை பெரேரா பெற்றிருந்தார்.



இறுதியும் தீர்க்கமுமான போட்டி இன்று(18 /06 /2012) அதே மைதானத்தில் நடைபெற்றது.இதில்நாணயச்சுழற்ச்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களினை இழந்து 248 ஓடடங்களை குவித்திருந்தது,பரவலாக எல்லோரும் தமது பங்களிப்பை வழங்கியிருந்தாலும் இருவர் மட்டும் தமது அரைச்சதத்தை பூர்த்தி செய்திருந்தனர்,இம்ரான் farhat 56(63) ,ஆட்டமிழக்காமல் உமர் அக்மல் 55(61) ஆகியோரே அவர்கள்.பந்துவீச்சில் ஜீவன் மென்டிஸ்,குலசேகர தலா இரண்டு விக்கெட்டுக்களினையும்,பெரேரா,மலிங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.பதிலுக்காடிய இலங்கை ஆரம்பத்தில் மெதுவாக ஆடினாலும் இறுதியில் வெற்றியைப்பறித்து தொடரை தனதாக்கியிருக்கிறது.இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட நான்கே பந்துகளில் ஆட்டத்தை வென்று காட்டியிருக்கிறார் அணியின் எதிர்கால தலைவரான மத்தியூஸ் 80 (76).சந்திமால் 54 (74),சங்கா 40(68) ஆகியோர் அவருக்கு துணை நின்றிருக்கிறார்கள்.ஆட்டநாயகன் விருதை மத்தியூஸ் பெற்றிருக்கிறார்.

தொடரின் சிறந்த பந்துவீச்சாளராகவும்,சிறப்பாட்டக்காரராகவும் பெரேரா தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.தொடர்முழுவதும் இரண்டு அணிகளும் போராடினாலும் இலங்கையின் கையே மேலோங்கி காணப்பட்டிருந்தது.மூன்றாவது போட்டி கூட இலங்கைக்கு சாதகமாக சென்றுகொண்டிருக்கையிலேயே கைவிடப்பட்டது.

தொடரில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய முதல் மூன்றுபேர்களில் அஸார் அலி ஐந்து இன்னிங்க்ஸ்களில் இரண்டு அரைச்சதம் உள்ளடங்கலாக 217 ஓட்டங்களினையும் சங்கக்கார நாலு இன்னிங்க்ஸ்களில் ஒரு அரைச்சதம் உள்ளடங்கலாக167 ஓட்டங்களினையும் டில்ஷான் ஒரு சதம் உள்ளடங்கலாக 158 ஓட்டங்களினையும் எடுத்துள்ளனர்.

தொடரின் சிறப்பாக பந்துவீசிய முதல் மூன்றுபேரில் தொடர்நாயகன் பெரேரா நாலு இன்னிங்க்ஸ்களில் ஒரு ஹட்ரிக் ,ஒரு ஐந்துவிக்கெட் பெறுதி உள்ளடங்கலாக 11 விக்கெட்டுக்களையும்,மலிங்க மற்றும் குலசேகர ஐந்து இன்னிங்க்ஸ்களில் 7 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
இலங்கையின் மத்திய மற்றும் பின்வரிசை துடுப்பாட்டத்தினை தாங்கிப்பிடிக்கவேண்டிய நான்கு அல்லது ஐந்து வீரர்கள் தேர்வாளர்களுக்கு நம்பிக்கை தந்த ஒரு தொடராக இந்த தொடரை நாம் கருதலாம்......பொறுத்திருந்து பார்ப்போம் டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்துவரும் தொடர்களிலும் இலங்கையின் பலத்தை.....:)

Monday 11 June 2012

உலகத்தரத்தில் ஒரு தமிழ்ப்படைப்பு


தமிழ்த்திரையுலகத்தை பொறுத்தவரை சகலகலாவல்லவனாக மட்டுமல்லாமல் சகலத்தையும் அடுத்தநிலைநோக்கி எடுத்துச்செல்லும் சுமைதாங்கியாகவும் தன்னை வரித்துக்கொண்டவர்(இப்பொழுது பலரைக்குறிப்பிடலாம் என்றாலும் நானறிந்தவரையில் இவரே வாழும் முன்னோடி) உலகநாயகன்.எனினும் அவர் இதற்காக வணிகரீதியாக நல்லபெறுதிகளை பெற்றிருக்கவில்லை அல்லது குறைவாகவே பெற்றிருந்தார்.

அதற்கு உதாரணங்களாக ஹேராம்,ஆளவந்தான்,அன்பேசிவம், மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் பலபடங்களை குறிப்பிடமுடியும். தசாவதாரம்,தேவர்மகன் போல வெற்றிக்கனிகள் இருந்தாலும் அவையும் போதுமானவையாக தென்படவில்லை அவரின் உழைப்புக்கு...........ஆனால் இந்தமுறை நல்லதொரு அறுவடை கமலுக்கு கிடைக்குமென நம்பலாம் ஏனெனில்,கடந்த சிலதினங்கள்வரை விரைவில் வரவிருக்கும் படங்களின் வரிசையிலிருந்த விஸ்பரூபம் எனும் திரைப்படம்,இன்று தமிழ் சினிமா ரசிகர்கள் தவமிருக்கும் படமாக மாறியிருக்கிறது....

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று வெளியிடப்பட்ட படத்தின் முன்னோட்டக்காட்சி மற்றும் புகைப்படங்கள்,

முன்னோட்டத்தை காண சொடுக்கவும்....


நேர்த்தியான தொழினுட்பங்களோடு செதுக்கப்பட்ட சித்திரமாக மின்னுகிறது முன்னோட்டம்.கமலின் நடிப்பை இன்னொருமுறை சொல்லித்தெரிய வேண்டியதில்லையென்றாலும், படத்தில் உண்மையாகவே கமல் இரட்டை(வேட)விஸ்பரூபம் எடுத்திருக்கிறார்.அதிலும் கிருஷ்ணராக ஆண்ட்ரியாவும் ராதையாக கமலும் அபிநயம் காட்டும் காட்சியில் என்ன ஒரு நளினம் ராதையின் மன்னிக்கவும் கமலின் உடல்முழுதும்.ஆண்ட்ரியா போதுமான கம்பீரம் காட்டியிருக்கின்றார்.

இதுவரையில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருக்கிறது கமல் சொல்லியிருக்கும் கதையுங்கூட....அமெரிக்காவில் தனது உயர்கல்வியைப் பூர்த்திசெய்து,வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் ஒருபெண்(நிருபமா) ,அங்குள்ள நடனப்பள்ளியொன்றை நடத்திவரும் விஸ்வநாதனை திருமணம் செய்துகொள்கிறாள்.காதல்,ஊடல்,கூடலின்றி இல்லறம் நடத்தி தனது உயர்கல்வியை முடித்து வேலைக்கு செல்ல தொடங்குகிறாள்.

இதன்பின்தான் கதையின் போக்கில் மாற்றம் வருகிறது, இப்பொழுது திருமணத்தை முறிக்கவிரும்புகிறாள் நிருபாமா.இதற்காக ஒரு தனியார் துப்பறிபவரை வாடகைக்கு அமர்த்தி விஸ்வநாதனிடம் உள்ள பலவீனங்கள்,தீய பழக்கவழக்கங்களை அறியமுற்படுகிறாள்.

இதன்போதுகிடைக்கும் துப்புத்தான் மிகுதிக்கதையை கொண்டுசெல்கிறது......இதுதான் கமல் சொல்லியிருக்கும் கதை,மிகுதியை வெள்ளித்திரையில் பார்க்க காத்திருப்போம்.


இரண்டாவது இந்தபடம் சிங்கப்பூரில் இடம்பெற்ற சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது,படத்தைப்பார்த்த உலகநாயகனின் நண்பரும் பிரபல ஆங்கிலப்படத் தயாரிப்பாளருமான பேரி ஒஸ்போன் அவர்கள் தனது தாயரிப்பில் கமலை படமொன்றை இயக்கி நடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.அதற்கு கமலும் ஒத்துக்கொண்டுள்ளாராம்.

கமல் தன் குரலில்....


இந்த இரண்டுமே படத்தின் தரத்தையும் நேர்த்தியையும் அறிய போதுமானவை......விஸ்வரூபத்தை தொடர்ந்தும் நல்ல விருந்துக்காக காத்திருப்போம்.


Sunday 10 June 2012

வேண்டாம்...

மீண்டுவந்திடக்கூடாது
அந்தநாள்
இருந்துவிடட்டும்
கதைசொல்லக்கூடிய
ஞாபகமாக மட்டும்...

இறைவனும்
அருள்தரட்டும்
இறந்தவர் மீண்டுவர
இதயங்கள்
கரையுடைத்து
கண்ணீர் பாச்சட்டும்
கரைத்திட
நிறைந்த சோகங்களை...!

மழைநாள்....



வீரனைப்பார்க்க
வானம்வெளிச்சம் பாச்சியது
இடிக்குப்பயந்து
அழுதுகொண்டிருந்தார்
சிலையாகி
நின்றுகொண்டிருந்த போர்வீரர்
மறைக்க
மேகம் தான்அழுதுகொண்டிருந்தது....

வலிகளுடன்


பிரிந்தபின்னே
பிரிந்திடயெதுமின்றி
உனைப்பர்த்தேன்
முள்வேலிக்குள்ளே...!

உன்னைப்பார்த்ததும்
கருவிழந்துபோனது
என்வாழ்க்கையும்
வழமையாகவே
உருவிழக்கும்
என்வார்த்தைகளோடு...!

Tuesday 29 May 2012

காதல்

படம்தாண்டியும்
வாழ்ந்திடும்
பாத்திரம்போல
நீ
வாழ்கிறாய்
மனதோடு
காதல்....

கரைகடந்தும்
வந்திடும்
அலைபோல
நான்
துடிக்கிறேன்
உன்னோடு
வாழ..........

கள்ளவைத்தியர்....

நிறைமாத மேகத்தின்
பிரசவத்திற்காய் காத்திருந்தன
குறைமாதப்பயிர்கள்-கருக்
கலைப்புச்செய்து போனார்
அசேதனமெனும் கள்ளவைத்தியர்...

Friday 25 May 2012

காத்திருப்பு

என்நெடுநாள் ஆசைகளில்
அவளின் ஸ்பரிசமுமொன்று..
தொட்டுவிட துடித்தாலும்
உடைந்துவிடக்கூடும்
நட்பெனும் போர்வை
எனும் பயமும் கூடவே...!

பசுத்தோலோடு புலி
பசிக்கும் காதலிற்காய்
கானல்நீரான காதல்
கைக்கெட்டும் என்று..!

காலைக் கடற்க்கரைபோல..
மலரத்துடிக்கும் முகிழ்போல..
பன்னீராகும் பனித்துளிபோல..
என்வரிகளின் உள்ளுறைந்தது
அவள்நினைப்பு...!

வாசிக்கமட்டும் தெரிந்த
கவிதைகளை
ரசிக்கவும்
வைத்தவளவள்..!

அவளே விதையாக
மலர்ந்த கவியோடு
என்னை சலனப்படுத்தும்
வருகைக்கான காத்திருப்பு...!!!